தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது


பனங்கிழங்கு விற்பனை; மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ள வாழைத்தார்கள், கரும்பு கட்டுகள்
x
பனங்கிழங்கு விற்பனை; மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ள வாழைத்தார்கள், கரும்பு கட்டுகள்
தினத்தந்தி 11 Jan 2021 4:19 AM GMT (Updated: 11 Jan 2021 4:19 AM GMT)

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று களை கட்டியது.

பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு வந்தனர். அங்கு கரும்பு, மஞ்சள் குலை, வாழைத்தார் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு ஆத்தூர், வாழவல்லான், திசையன்விளை, ஸ்ரீவைகுண்டம், சேரன்மாதேவி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

தூத்துக்குடி மார்க்கெட்டில் நாட்டு பழ வாழைத்தார் ரூ.400-க்கும், கதலி ரூ.350-க்கும், பூலான்செண்டு ரூ.500-க்கும், கோழிக்கூடு ரூ.300-க்கும், சக்கை ரூ.250 முதல் ரூ.300 வரையும், செவ்வாழை ரூ.700-க்கும், ஏத்தன்பழம் ரூ.300 முதல் ரூ.350 வரையும், பச்சைபழம் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் விற்பனையானது.

கரும்பு
இதே போன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுப்பது வழக்கம். இதனால் பொங்கல் பானைகள் விற்பனையும் நடந்தது. தேனி, திருமங்கலம் பகுதியில் இருந்து கரும்பு விற்பனைக்காக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டு கரும்பு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று பனங்கிழங்கு விற்பனையும் நடந்து வருகிறது. சாயர்புரம், சிவத்தையாபுரம், திசையன்விளை, உடன்குடி உள்ளிட்ட பகுதிளில் இருந்து பனங்கிழங்கு தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. 600 கிழங்குகள் கொண்ட ஒரு மூட்டை பனங்கிழங்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பொங்கல் ெபாருட்கள் விற்பனை களை 
கட்டியுள்ளது.

காய்கறி
மேலும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால், காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காய்கறி விலையிலும் பெரிய மாற்றம் இல்லாமல் குறைவாகவே விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைவிவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

கத்தரிக்காய் - ரூ.50, தக்காளி - ரூ.15, மிளகாய் - ரூ.30, வெண்டைக்காய் - ரூ.25, அவரைக்காய் - ரூ.30, உருளைக்கிழங்கு - ரூ.20-30, முட்டைகோஸ் - ரூ.15, சேனைக்கிழங்கு - ரூ.15-20, சிறுகிழங்கு - ரூ.40, பீன்ஸ் - ரூ.50, பூசணிக்காய் - ரூ.8, முருங்கைக்காய் - ரூ.120,கேரட் - ரூ.15, பீட்ரூட் - ரூ.20, சவ்சவ் - ரூ.15, கருணைக்கிழங்கு - ரூ.40, சேம்பு - ரூ.50, சீனிக்கிழங்கு - ரூ.25, தடியங்காய் - ரூ.8, சிறியவெங்காயம் - ரூ.60, பல்லாரி - ரூ.40.

Next Story