இன்று பண்டிகை கொண்டாடப்படுகிறது: மழையினால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்


இன்று பண்டிகை கொண்டாடப்படுகிறது: மழையினால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 14 Jan 2021 12:08 AM GMT (Updated: 14 Jan 2021 12:08 AM GMT)

பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிற நிலையில் புதுக்கோட்டையில் மழையினால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமானது.

புதுக்கோட்டை, 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. வீடுகளில் இன்று பொங்கல் பானையில் பச்சரிசியில் பொங்கலிட்டு, கரும்புகள், மஞ்சள் கொத்து, காய்கறிகள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதையொட்டி பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமானது.

கடந்த 3 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் விடாமல் பரவலாக ஒரே சீராக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் மழை பெய்தது. இதனால் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். பொங்கல் பொருட்கள் விற்பனையை நம்பியிருந்தவர்கள் சற்று வருத்தமடைந்தனர். காலையில் லேசாக வெயில் அடித்த நிலையில் பின் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை, உழவர் சந்தை, மார்க்கெட்டுகளிலும் சாலையோரங்களிலும் விற்பனைக்காக கரும்புகள், மஞ்சள் கொத்து ஆகியவற்றை குவித்து வைத்திருந்தவர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

பொருட்கள் விற்பனை பாதிப்பு

மழையோடு மழையாக ஒரு சிலர் மட்டும் பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்தனர். காலை 11 மணிக்கு மேல் மழை நின்றது. இதனால் வியாபாரிகள் பெரும் நிம்மதி அடைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் வானில் கருமேங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. இதனால் பொங்கல் பொருட்கள் விற்பனை பெரும் பாதிப்படைந்தது. சாலையோர வியாபாரிகள் மழையில் குடையைபிடித்தப்படி ஓரமாக நின்றதை காணமுடிந்தது. மழையில் மஞ்சள் கொத்துகள் நனைந்தப்படி இருந்தது. மழை சிறிது நின்ற பின் வியாபாரம் நடைபெற்றது. பொதுமக்களும் குடையை பிடித்தப்படி வந்து பொங்கலிடுவதற்கான பொருட்களை வாங்கிச்சென்றனர்.

பயணிகள் கூட்டம் குறைவு

கரும்புகளும் விற்பனைக்காக ஏராளமாக வந்திருந்தன. 10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.200 முதல் விற்பனையானது. சிலர் விற்றால் போதும் என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு சற்று குறைந்து விற்பனை செய்தனர். இதேபோல மஞ்சள் கொத்தும் மழையில் நனைந்தநிலையில் ஒரு ஜோடி ரூ.20 முதல் விற்றனர். காய்கறிகள் விற்பனையும் இதேபோல நடைபெற்றது. வாழைத்தார்கள், பழங்கள், பூக்கள் விலைகள் சற்று உயர்ந்திருந்தது. இருப்பினும் மழையினால் வாடிக்கையாளர்களுக்கு சற்று குறைத்து விற்பனை செய்தனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மழையும் தொடர்ந்து பெய்ததால் பொதுமக்களும் வெளியில் செல்வதில் பெரும் சிரமம் அடைந்தனர். வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் கூட்டம் புதிய பஸ் நிலையத்தில் குறைவாக இருந்தது.

கீரமங்கலம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கீரமங்கலம் மலர் சந்தையில் பூக்கள் பரபரப்பான விற்பனை ஆனது. அதாவது முல்லை பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், மல்லிகை பூ கிலோ ரூ.ஆயிரத்திற்கும், கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.500-க்கும், காட்டுமல்லி கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி பூ கிலோ ரூ. 100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.60-க்கும் விற்பனை ஆனது. தொடர் மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைவாக இருந்தது.

பொங்கல் விழாவை முன்னிட்டுகறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கிராம மக்கள் ஆர்வமாக நாட்டுக்கோழிகளை வாங்கி சென்றனர்.

வடகாடு

வடகாடு பகுதியில் மழையைபொருட்படுத்தாமல் பொதுமக்கள் மண்பானைகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். ஆனால் வடகாட்டில் கோலப்பொடி மந்தமாகவே விற்றது.

Next Story