பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் போக்குவரத்து மாற்றம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 15 Jan 2021 1:22 AM GMT (Updated: 15 Jan 2021 1:22 AM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

உலகெங்கிலும் வாழக்கூடிய தமிழர்கள் தை மாதம் முதல் நாளை பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றனர்.

இந்த பண்டிகை உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான நேற்று போகிப்பண்டிகை திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டது. பழையன கழிந்து புதியன சேர வேண்டும் என நினைத்து பலர் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியே கொண்டு வந்து தீயிட்டு எரித்தனர்.

கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

நாளை (வெள்ளிக்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை அன்றைய தினத்தில் சிறப்பிப்பார்கள். எனவே மாட்டுக்கு தேவையான மூக்கனாங் கயிறு பல்வேறு வண்ணங்களிலும், பல்வேறு அளவில் மணிகள் போன்றவை திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் விற்கப்பட்டது. மாடுகளை வளர்ப்பவர்கள் பலர் அதனை வாங்கி சென்றனர்.

அதைத்தொடர்ந்து உறவினர்களை சந்தித்து அன்பு பகிரும் நாளாக காணும் பொங்கல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை நகர வீதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் முளைத்திருந்தது.

போக்குவரத்து மாற்றம்

பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் கரும்பு, பானை, மஞ்சள் கொத்து, கோலப்பொடி, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றின் விற்பனை களை கட்டியது.

மக்கள் பலர் கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story