செங்குன்றம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற வாலிபர்


செங்குன்றம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 16 Jan 2021 2:18 AM GMT (Updated: 16 Jan 2021 2:18 AM GMT)

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலம் நபராம்பூரைச் சேர்ந்த ராகுல்(வயது 26) என்பவரும், அவருடைய மனைவி பூஜாவும் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இதே அரிசி ஆலையில் ஒடிசா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா(28) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையில் ராகுலின் மனைவி பூஜாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் அறிந்த ராகுல், கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவி மற்றும் கிருஷ்ணாவை பலமுறை கண்டித்தார்.

ஆனாலும் பூஜாவுடனான கள்ளக்காதலை கிருஷ்ணா கைவிடவில்லை. தொடர்ந்து அவருடன் பழகி வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல், கத்தியால் கிருஷ்ணாவை குத்திக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர், கொலையான கிருஷ்ணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராகுலை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story