கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2021 1:39 AM GMT (Updated: 17 Jan 2021 1:39 AM GMT)

கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி விக்டோரியா ஆஸ்பத்திரி பெண் துப்புரவு தொழிலாளி நாகரத்னாவுக்கு போடப்பட்டது. தடுப்பூசி தொடங்கும் நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நமது விஞ்ஞானிகள் 10 மாதங்களில் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.

கர்நாடகத்தில் 243 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) 24 ஆயிரத்து 300 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பிரபலமான டாக்டர்கள் தடுப்பூசியை போட்டு கொள்கிறார்கள். இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது, செயல் திறன் கொண்டது.

பொதுமக்கள் அரசு வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். வதந்திகளை நம்பக்கூடாது. ஒருவேளை பக்க விளைவுகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பீதி அடைய தேவை இல்லை. இணை நோய் உள்ளவர்களுக்கு அடுத்த கட்டத்தில் தடுப்பூசி போடப்படும். நமது நாட்டில் தான் தடுப்பூசியின் விலை மிக குறைவாக உள்ளது.

தடுப்பூசிபோட்டுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். ஆனால் பிரதமர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மட்டுமே முதல் கட்டத்தில் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும். இந்த தடுப்பூசி விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அக்கட்சி பாடம் கற்கவே இல்லை. இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story