பாதிக்கப்பட்டவர்கள் விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும்: பயிர் பாதிப்புகள் குறித்து 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


பாதிக்கப்பட்டவர்கள் விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும்: பயிர் பாதிப்புகள் குறித்து 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 21 Jan 2021 10:43 PM GMT (Updated: 21 Jan 2021 10:43 PM GMT)

பாதிக்கப்பட்டவர்கள் விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்துவதோடு, பயிர் பாதிப்புகள் குறித்து வருகிற 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்த ககன்தீப்சிங்பேடி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ராராமுத்திரக்கோட்டை பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, தமிழக அரசின் வேளாண் உற்பத்தி கமி‌‌ஷனரும், முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி, கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பயிர் பாதிப்பின் தன்மை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அறுவடை கூட செய்ய முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர். மேலும் மழை பாதிப்பால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்தால் அதற்கு ஆகும் செலவுக்கு கூட ஈடாகாது என தெரிவித்தனர்.

29-ந்தேதிக்குள் அறிக்கை

பின்னர், வாளமர்க்கோட்டை பகுதியிலும் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து பொன்னாப்பூர் கிராமத்திலும், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள, நெல் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன எந்திர செயல்பாடுகளையும் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயிர் பாதிப்புகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரியளவில் இழப்பை சந்தித்துள்ளனர் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இது விவசாயிகளுக்கு சோதனையான நேரம் தான். பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு செய்து கணக்கீடு செய்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர் கூட விடுபடாமல், அதன் அறிக்கையை வருகிற 29-ந் தேதிக்குள்ளாக அரசுக்கு தர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்கூட்டியே ஆய்வு

அதன் பிறகு முறையாக அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தாண்டு 30 லட்சம் ஏக்கர் அளவிற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். வழக்கமாக பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் பிப்ரவரி, மார்ச் மாதரங்களில் தான் அறுவடை சோதனைகளை மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்கூட்டியே, பயிர் அறுவடை சோதனைகளை விரைவாக முடித்து இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு, காப்பீட்டு நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது க‌‌ஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு, எப்படியாவது அரசிடம் இருந்து உரிய நிவாரணங்களை பெற்று தர முயற்சி செய்து வருகிறோம். பயிர் பாதிப்புக்கான நிவாரணம் வழங்குவதற்கான 33 சதவீத உச்சவரம்பு இந்தியா முழுவதும் உள்ள ஒரு கோட்பாடு, இதனை நீக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். வேளாண்,தோட்டக்கலை,வருவாய் துறையினர் பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வாங்கி தர முயற்சி எடுத்து, விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.

2 உலர்த்தும் எந்திரங்கள்

நெல் ஈரப்பதத்தை உலர்ந்தும் எந்திரம் நல்ல முறையாக செயல்படுகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தில், வேளாண் பொறியல் துறை சார்பில், தலா ரூ.12 லட்சம் மதிப்பில், புதிதாக 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பத்தை உலர்ந்தும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இது சோதனையில் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) முத்துமீனாட்சி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) சிற்றரசு, தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story