இலவச மடிக்கணினி வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அரசு பள்ளி மாணவிகள் முற்றுகை


இலவச மடிக்கணினி வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அரசு பள்ளி மாணவிகள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Feb 2021 11:06 PM GMT (Updated: 1 Feb 2021 11:10 PM GMT)

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசு பள்ளி மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். மேலும் பெட்டியிலும் பொதுமக்கள் மனுக்களை போட்டு சென்றனர். 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற்றார். அப்போது ஏராளமானவர்கள் மனுக்கள் கொடுத்தனர்.

சிவனடியார்கள்

பாளையங்கோட்டை சிவனடியார் திருக்கூட்டத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து சமூக வலைதளங்களில் தேவாரம் திருவாசகத்தை பற்றி அவதூறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாடல்கள் பாடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் டி.கே.பி.ராஜாபாண்டியன், இளைஞரணி தலைவர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் அருகிலுள்ள இடுகாடு மற்றும் சுடுகாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பபாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘நெல்லை ராமையன்பட்டி அரசு புது காலனியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

பாளையங்கோட்டையை சேர்ந்த கார்த்திக்தம்பன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து, ‘நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி மலை மேல் அமர்ந்திருக்கும் திருமலைநம்பி கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு மலையில் வைத்து அன்னதானம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறி மனுவில் கூறியுள்ளனர்.

மாணவிகள் முற்றுகை

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஏராளமான மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘கடந்த 2017-2018-ம் ஆண்டு படித்த எங்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. பலமுறை பள்ளிக்கூடங்களில் கேட்டும் மடிக்கணினி வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகவே உடனடியாக எங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

வியாபாரிகள்

நெல்லை மாநகர நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் தலைவர் மாரியப்பன் தலைமையில் ெகாடுத்த மனுவில், ‘நாங்கள் நெல்லை டவுன் வடக்கு ரத வீதி மற்றும் வண்ணார்பேட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகிறோம். நாங்கள் நிரந்தரமாக கடை வைக்க அனுமதி தரவேண்டும். எங்கள் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வதற்கு தக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

பாப்பாகுடி யூனியன் அத்தாளநல்லூர் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்களை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊருக்கு குடிநீர் வரக்கூடிய மோட்டார், குழாய் போன்றவை கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சேதம் அடைந்தது. இதனால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். உடனே குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

Next Story