கள்ளக்காதல் ஜோடி லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை


கள்ளக்காதல் ஜோடி லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2021 5:23 PM GMT (Updated: 17 Feb 2021 5:23 PM GMT)

கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூக்கில் பிணங்கள்
கன்னியாகுமரி வடக்கு தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 14-ந் தேதி அன்று கணவன், மனைவி என கூறிக்கொண்டு 2 பேர் அறை எடுத்து தங்கினர்.
நேற்று மதியம் 2 மணி ஆகியும் அவர்கள் அறை திறக்கப்படாததால் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே ஊழியர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஆணும், பெண்ணும் ஒரே துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
கள்ளக்காதல் ஜோடி 
பின்னர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.
மேலும் இதுபற்றி வெளியான பரபரப்பு தகவல் விவரம் வருமாறு:-
குடும்பத்தினர் எதிர்ப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ரோடு நெடியவிளை பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். இவருடைய மகன் சாஜூ (வயது 40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். திருவனந்தபுரம் பிரசாந்த் நகர் பனையில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி ஆஷா (35). இவர்களுக்கும் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சாஜூவுக்கும், ஆஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் இரு குடும்பத்திலும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
யாருடைய தொந்தரவும் இன்றி...
ஆனால் கள்ளக்காதலை விட இருவருக்கும் மனமில்லை. இந்தநிலையில் சாஜூவும், ஆஷாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு கிளம்பினர். 
மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து லாட்ஜில் அறையடுத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து இருவரும் 2 நாட்களாக யாருடைய தொந்தரவும் இன்றி பல இடங்களை சுற்றி பார்த்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். அப்போது, நம்முடைய கள்ளக்காதல் தொடர குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், சேர்ந்து வாழ்வதிலும் பிரச்சினை ஏற்படும். இதனால் இருவரும் சாவிலாவது இணைவோம் என கருதி தற்கொலை செய்யும் முடிவை தேர்ந்தெடுத்தனர்.
அதன்படி நேற்று கள்ளக்காதல் ஜோடி லாட்ஜ் அறையில் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 
பரபரப்பு
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story