வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடி வெட்டி படுகொலை


வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடி வெட்டி படுகொலை
x
தினத்தந்தி 18 Feb 2021 1:11 AM GMT (Updated: 18 Feb 2021 1:11 AM GMT)

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வில்லியனூர், பிப்.18-
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ரவுடி
வில்லியனூர் அருகே உள்ள மணவெளி காசிவிசுவநாதர் நகரை  சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் மதன் (வயது 20). ரவுடி. இவர் மீது கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் மதன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து ஆரியபாளையம் அரசு சாராய ஆலை எதிரே வந்து கொண்டிருந்தார். அவரை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென்று மதனை சுற்றி வளைத்தனர். 
வெட்டிக்கொலை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் மர்மகும்பலை சேர்ந்தவர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மதனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். 
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  மதன்     இறந்து போனார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த பயங்கர கொலையை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 
போலீஸ் விசாரணை
அதன்பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கொலை செய்தவா்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் வில்லியனூர்   பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.

Next Story