பப்ஜி விளையாட்டு மூலம் பழகி பெண் அதிகாரி பாலியல் பலாத்காரம்


பப்ஜி விளையாட்டு மூலம் பழகி பெண் அதிகாரி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 21 Feb 2021 10:03 PM GMT (Updated: 21 Feb 2021 10:03 PM GMT)

பப்ஜி விளையாட்டு மூலம் பழகி தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பெண் அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை

பப்ஜி விளையாட்டு மூலம் பழகி தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பெண் அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் அதிகாரி புகார்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 24 வயது பெண் அதிகாரி, கேரள மாநிலம் பல்லுருத்தி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் சம்பவம் நடந்த இடம் கோவை என்பதால் அந்த வழக்கை கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கேரள போலீசார் மாற்றினார்கள். 

அந்த பெண் அதிகாரி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் கேரளாவை சேர்ந்தவள். அந்த பகுதியில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். நான் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். 

பப்ஜி விளையாட்டு

இந்த விளையாட்டை ஆன்லைனில் பலர் சேர்ந்து விளையாடலாம்.  நான் பப்ஜி விளையாடியபோது 28 வயது வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனக்கு கேரளா மாநிலம் இடகொச்சி என்ற இடத்தை சேர்ந்தவர் என்று கூறினார்.

 அதைத்தொடர்ந்து நாங்கள் 2 பேரும் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடினோம்.
இந்த நிலையில் அந்த வாலிபர் என்னிடம் செல்போன் எண் கேட்டார். நானும் கொடுத்தேன். இதைத் தொடர்ந்து நாங்கள் தொடர்ந்து போன் செய்து பேசினோம். நாளடைவில் நாங்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக மாறினோம். 

பாலியல் பலாத்காரம்

இதற்கிடையில் அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு  கோவையில் உள்ள ஒரு நண்பரை பார்க்க செல்வதாகவும், நீயும் என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார். முதலில் மறுப்பு தெரிவித்த நான் வற்புறுத்தல் காரணமாக அவரிடம் வருவதாக கூறினேன்.

சம்பவத்தன்று நாங்கள் 2 பேரும் கேரளாவில் இருந்து பஸ் மூலம் கோவை காந்திபுரத்திற்கு சென்றோம். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினோம். அப்போது அந்த வாலிபர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் நாங்கள் 2 பேரும் கேரளாவுக்கு சென்று விட்டோம். 

வாலிபருக்கு வலைவீச்சு

அதன்பிறகு அவர், என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளேன். எனவே அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்த கேரள வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story