உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு


உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு
x
தினத்தந்தி 22 Feb 2021 6:08 PM GMT (Updated: 22 Feb 2021 6:08 PM GMT)

அரசு விழாவில் வழங்கப்பட்ட உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு இலுப்பூர், விராலிமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அன்னவாசல், பிப்.23-
அரசு விழாவில் வழங்கப்பட்ட உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு இலுப்பூர், விராலிமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு விழா
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் நேற்று முன்தினம் அரசு சார்பில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் பலர் பங்கேற்றனர். அப்போது, அவர்களுக்கு முட்டையுடன் புளியோதரை சாதம் பொட்டலங்களாக வழங்கப்பட்டன. அதனை பலர் அங்கேயே சாப்பிட்டனர். சிலர் வீட்டுக்கு எடுத்து வந்து இரவில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
வயிற்றுப்போக்கு
இந்நிலையில்,  திருநல்லூர், கலர்பட்டி, ஆச்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் புளியோதரை பொட்டலங்களை வீட்டுக்கு எடுத்து வந்து சாப்பிட்டுள்ளனர். இதனை சாப்பிட்ட அப்பகுதிகளை சேர்ந்த வள்ளிக்கண்ணு (வயது 40), புவனேஸ்வரி (40), கருத்தமணி (70), சத்தியா (25), ரத்தினம் (75), மாரிக்கண்ணு (48), மல்லிகா (41), ராசாத்தி (29), சரண்ராஜ் (11), தேன்மொழி (15), தீபரஞ்சனி (15), யோகராஜ் (12) உள்பட 64 பேருக்கு நேற்று அதிகாலையில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 64 பேரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 15 பேர் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சிறப்புக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
காலதாமதமாக சாப்பிட்டதால்...
இந்த சம்பவம் குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, புளியோதரை சாப்பாட்டை காலம் கடந்து உண்டதால் ஒவ்வாமை ஆகி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு சிறு, சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தற்போது, அனைவரும் நலமுடன் உள்ளனர். எனினும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றனர்.
இதற்கிடையில் விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிர்தம் (வயது 75) ரத்த வாந்தி எடுத்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story