அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி


அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Feb 2021 6:14 PM GMT (Updated: 22 Feb 2021 6:14 PM GMT)

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவில் சாமி வீதிஉலாவும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் கத்தி, சூலம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்தியவாறு 18 கரங்களுடன் மயான காளியாய் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.அப்போது ஏராளமான பக்தர்களும், திருநங்கைகளும் அங்காளம்மன், காளி, காத்தவராயன், பாவாடைராயன், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு வந்து அங்கு படையலிட்டு தாங்கள் கொண்டு வந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை அம்மன் மீது வீசி கொள்ளையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கீழ்பெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story