மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 23 Feb 2021 4:51 PM GMT (Updated: 23 Feb 2021 4:54 PM GMT)

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியதில் கணவன்-மனைவி பலியாகினர்.

காரைக்கால், 

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் சுனாமி நகரை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 35), மீனவர். இவருடைய மனைவி வீரலட்சுமி (35), இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இன்று காலை மோட்டார் சைக்கிளில் மனைவி வீரலட்சுமியுடன் சிவபெருமாள் காரைக்கால் கடைவீதிக்கு சென்றார். அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

உடல்நசுங்கி பலி

காரைக்கால் நிரவி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கணவன், மனைவி இருவரும் நடுரோட்டில் விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த டேங்கர் லாரி அவர்கள் மீது ஏறிச்சென்றது.
இ்தில் வீரலட்சுமி அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். படுகாயமடைந்த சிவபெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பரிதாபத்தில் மகள்கள், மகன்

இதுகுறித்து திரு-பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய டேங்கர் லாரி டிரைவர், நிரவியை சேர்ந்த சுப்பிரமணியம் (49) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற போது டேங்கர் லாரி மோதியதில் கணவன்-மனைவி பலியான சம்பவம் திரு-பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரேநேரத்தில் தாய், தந்தையை இழந்த அவர்களது மகள்கள், மகனின் நிலை பரிதாபமாகியுள்ளது.

Next Story