சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்


சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2021 5:24 PM GMT (Updated: 23 Feb 2021 5:24 PM GMT)

திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 360 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்காக நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் நேற்று காலை திரண்டனர்.

இதில் அனைவரும் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர். இதையடுத்து மாநில செயற்குழு உறுப்பினர் ஜெசி தலைமையில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். 

இதனை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். இதில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமு உள்ளிட்ட நிர்வாகிகள், சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தின் போது சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டபடி சென்றனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு ஏ.எம்.சி. சாலையில் அமர்ந்து சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் 360 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story