சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்


சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2021 5:45 PM GMT (Updated: 23 Feb 2021 5:45 PM GMT)

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 253 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பணித்தொகையாக சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று பகல் 12.30 மணியளவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாராம் வரவேற்றார். மாவட்ட தலைவர் வடிவேல் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் தேசிங்கு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் சாவித்திரி சிறப்புரையாற்றினார்.

253 பேர் கைது

இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் மணிக்கண்ணன், வீமன், ஆறுமுகம், இணை செயலாளர்கள் ரஷிதா, அன்பழகன், கிருபாகரன், ஜானகிதேவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அபராஜிதன், விஜயா உள்பட பலர் கருப்பு உடை அணிந்தபடி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 253 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story