குழாயில் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாயில் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 23 Feb 2021 6:20 PM GMT (Updated: 23 Feb 2021 6:20 PM GMT)

குழாயில் உடைந்து வீணாகும் குடிநீர்

வெள்ளியணை
கரூர் மாவட்டம் கட்டளை பகுதியில் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் உப்பிடமங்கலம், ஜெகதாபி, வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த குடிநீர் குழாயில் உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதிவடம் செல்லும் சாலையில் குமரகவுண்டனூர் அருகே உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி நீண்ட தூரத்திற்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சாலை நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் புதியதாக தரமான தார் சாலை போடப்பட்டது.இப்படி குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் சாலையில் செல்வதால் சாலை சேதமடைந்து மீண்டும் குண்டும் குழியுமாக மாறி விடுமோ என்ற அச்சம் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் குழாய் உடைப்பால் வீணாகும் நீரால் வேடசந்தூர் பகுதிக்கு முழுமையான நீர் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுஅப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குழாய் உடைப்பை சரி செய்து சாலை சேதம் அடைவதை தடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story