விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்


விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 7:40 PM GMT (Updated: 26 Feb 2021 7:40 PM GMT)

மேட்டூரில் இருந்து உபரிநீரை அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்:
மேட்டூரில் இருந்து உபரிநீரை அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில், மேட்டூர் அணையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தர்மக்காவுசரபங்கா என்ற இடத்தில் மலையை உடைத்து உபரி நீரை சேலம் பகுதிக்கு தமிழக அரசு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் பாசன சங்க தலைவர் இளங்கோவன், செயலாளர் ஆனந்தகுமார், துணைத் தலைவர் ராஜதுரை, பொருளாளர் ராமு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க கொள்ளிடம் ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வெங்கட்ராமன், சுரேஷ், சரவணன் மற்றும் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைவிட வேண்டும்
இதுகுறித்து காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில், கொள்ளிடம் பகுதி கடைமடை பகுதியாகும். சாதாரணமாக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கடைமடை பகுதிக்கு வந்து சேருவதற்கு மாதக்கணக்கில் ஆகிறது. அப்படி கடைசியாக வந்து சேரும் தண்ணீரின் அளவு மிக குறைந்த அளவே உள்ளதால் விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லாமல் போகிறது.
இந்தநிலையில் தமிழக அரசு மேட்டூர் அணையின் மேற்கு பகுதியில் மலையை உடைத்து தண்ணீரை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் அறவே கிடைக்காமல் போகும். கடைமடை பகுதியில் தண்ணீரின்றி வறண்டு பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மேட்டூரில் இருந்து உபரி நீரை அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மேலும் கடைமடை பகுதிக்கு பாசன மற்றும் குடிநீர் கிடைப்பதற்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உரிய இடங்களில் உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.

Next Story