வருகிற 8-ந்தேதி முதல் நீச்சல் பயிற்சிக்கு அனுமதி


வருகிற 8-ந்தேதி முதல் நீச்சல் பயிற்சிக்கு அனுமதி
x
தினத்தந்தி 5 March 2021 5:55 PM GMT (Updated: 5 March 2021 5:55 PM GMT)

திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 8-ந்தேதி முதல் நீச்சல் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 8-ந்தேதி முதல்  நீச்சல் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். 
8-ந்தேதி முதல் அனுமதி 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தினமும் பயிற்சியை தொடங்குவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிக்கு வருகிற 8-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுகிறது. 
10 முதல் 65 வயதிற்குட்பட்ட பொதுமக்கள் தினமும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். அந்தவகையில் நீச்சல் பயிற்சிக்கு வருபவர்கள் உள்ளே நுழையும்போது உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படும். இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
நீச்சல் குளத்தில் 20 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நீச்சல் குளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும். வழிகாட்டுநெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இருந்தால் விளையாட்டு மைதானத்திற்குள்ளும், அரங்கிற்குள்ளும் நுழைய முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம் இயங்குவதற்கு அனுமதி இல்லை. நிலையான இயக்க நடைமுறை விதிமுறைகளுடன் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுவர். நீச்சல் குளம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
ரூ.59 கட்டணம் 
மாலை 5 மணி முதல் 6 வரை பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். நீச்சல் பயிற்சிக்கு ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 மற்றும் அதற்கு ஜி.எஸ்.டி ரூ.9 ஆக மொத்தம் ரூ.59 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், முக்கிய விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story