வணிகர்களிடம் அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து போராட்டம்


வணிகர்களிடம் அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2021 6:20 PM GMT (Updated: 6 March 2021 6:20 PM GMT)

தேர்தலுக்காக சோதனை நடத்தப்படும்போது, வணிகர்களிடம் பணம் பறிமுதல் செய்வதில் அதிகாரிகள் அத்துமீறலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டை, மார்ச்.7-
தேர்தலுக்காக சோதனை நடத்தப்படும்போது, வணிகர்களிடம் பணம் பறிமுதல் செய்வதில் அதிகாரிகள் அத்துமீறலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.
போராட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் அறிவித்த பிறகு வணிகர்களிடம் அதிகாரிகளின் அத்துமீறல் அதிகரித்து கொண்டிருக்கிறது. வணிகர்களுக்கு என்ன அடையாளம் வேண்டும், பணம், பொருளை எப்படி எடுத்து செல்ல வேண்டும்,  என்பதை தெளிவாக தாருங்கள் என தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள், வியாபாரிகளை வஞ்சித்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்று பேரழிவில் இருந்து மீண்டு வருவதற்கு முன்பாக தேர்தல் என்ற முறையில் வியாபாரிகளை அடித்து நொறுக்கிற நிலை ஏற்பட்டால் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்துகிற நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்திட வேண்டாம். இது தொடர்ந்தால் போராட்ட தேதியை அறிவிப்போம்.
தேர்தல் அறிக்கையில்...
வணிகர் நலவாரியம் அமைக்க வேண்டும், கொரோனாவில் இறந்த 32 வணிகர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடம் வலியுறுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் ஏற்க கூடிய சட்டமாக எழுத்துபூர்வமாக தருகிற கட்சிகளுக்கு அது குறித்து வருகிற 20-ந் தேதி சென்னையில் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு யாரை கைகாட்டுகிறதோ அவர்களுக்கு தான் எங்களது ஒட்டு என வணிகர்கள் முடிவு எடுத்துள்ளோம். எங்களது வாக்கு வங்கிகளை ஒன்று சேர்த்து கொண்டிருக்கிறோம். எங்கள் அமைப்பின் சார்பாக அரசியலுக்கு செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக மே மாதம் 5-ந் தேதி 38-வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாநில கூடுதல் செயலாளர் சம்பத்குமார், மாநில துணை தலைவர் சீனு சின்னப்பா, மாவட்ட தலைவர் சாகுல்அமீது, மாவட்ட செயலாளர் சவரிமுத்து, பொருளாளர் கதிரேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

Next Story