நாமக்கல், பரமத்திவேலூரில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல், பரமத்திவேலூரில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல்லில் இருந்து மோகனூசர் செல்லும் சாலையில் உள்ள காந்தி நகரில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத கிருத்திகையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு கிருத்திகையையொட்டி பால், இளநீர், சந்தனம் உள்பட 13 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சாமி தரிசனம்
கிருத்திகையையொட்டி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்ப பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திராளன பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
======
Related Tags :
Next Story