சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா; வீடியோ ஆதாரத்தின்படி வழக்குப்பதிவு


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா; வீடியோ ஆதாரத்தின்படி வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 March 2021 10:50 AM GMT (Updated: 20 March 2021 10:50 AM GMT)

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் களிமண்புரம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று 2 பேர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு வீட்டில் அமர்ந்து வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்கும்போது, யாரோ அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டனர். நேற்று அந்த காட்சியை சமூக வலைதளங்களில் பார்த்து தேர்தல் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி நாகநாதன் இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனுவாக கொடுத்தார். அந்த புகார் மனு அடிப்படையில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் ஆகியோர் குறிப்பிட்ட களிமண்புரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story