ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவருக்கு 6 மாதம் சிறை


ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவருக்கு 6 மாதம் சிறை
x
தினத்தந்தி 23 March 2021 8:40 PM GMT (Updated: 23 March 2021 8:40 PM GMT)

காசோலை மோசடி வழக்கில் ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஜெ.மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். ஆண்டிமடம் ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவரான இவர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடக்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்த முருகனிடம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.18 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு, அதற்கான பத்திரத்தை ெகாடுத்துள்ளார். இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கடந்த 2017-ம் ஆண்டு முருகன், சீனிவாசனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், கடன் வாங்கியதற்கான பத்திரத்தை திருப்பி கொடுத்தால், தான் வாங்கிய ரூ.18 லட்சத்தை கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முருகன், கடன் வாங்கியதற்காக சீனிவாசன் எழுதிக்கொடுத்த பத்திரத்தை கடந்த 1.8.2017-ந் தேதி திரும்ப அவரிடமே கொடுத்து விட்டார். இதையடுத்து 5.8.2017-ந் தேதி சீனிவாசன் ரூ.18 லட்சத்துக்கு காசோலையை முருகனிடம் வழங்கியுள்ளார். அந்த காசோலைைய கடந்த 5.12.2017-ந் தேதி முருகன் வங்கிக்கு கொண்டு சென்று பணம் பெற முயன்றபோது, சீனிவாசனின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், இது குறித்து கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சீனிவாசனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தும், முருகனிடம் இருந்து சீனிவாசன் வாங்கிய ரூ.18 லட்சத்தை 2 மாதத்தில் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும், பணத்தை திருப்பித்தராத பட்சத்தில் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதித்தும், உத்தரவிட்டார்.

Next Story