வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 31 March 2021 7:20 PM GMT (Updated: 31 March 2021 7:20 PM GMT)

கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. அன்று வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 4 வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. பின்னர் மே மாதம் 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்.
கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 
வாக்குப்பதிவு முடிந்ததும் அங்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகள், அதன் உறுதித்தன்மை குறித்தும், அங்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடுவது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட ஆயத்தப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

3 அடுக்கு பாதுகாப்பு

கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. முதலாவது துணை ராணுவத்தினர், 2-வது ஆயுதப்படை போலீசார், 3-வது உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப் படுவர். சமூக இடைவெளி விட்டு அமர வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்குகள் எண்ண 14 மேஜைகள் போடப்படுகிறது. ஒரு மேஜைக்கும், மற்றொரு மேஜைக்கும் இடையே 2 மீட்டர் தூரம் இடைவௌி விட்டு போடப்படும்.

தபால் வாக்கு

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 4 ஆயிரத்து 757 பேர் தபால் வாக்களிக்க படிவம் வழங்கிய நிலையில், 4 ஆயிரத்து 400 பேர் இது வரை வாக்களித்து உள்ளனர்.மற்றவர்களும் வாக்களித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கட்டாயம் முக கவசங் களை அணிய வேண்டும். கிருமி நாசினி, கையுறை பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான மற்றும் பாது காப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

வாக்குச்சாவடி மையங்கள்

தொடர்ந்து கடலூர் சுத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வசதியாக சாய்தளம் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக செய்யப்படும் முன்னேற்பாடு பணிகளையும் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாபு, கடலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கடலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பலராமன், தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story