உங்களின் ஆதரவால் மதுரை மேற்கு தொகுதி முதன்மை தொகுதியாக மாறி உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்


உங்களின் ஆதரவால் மதுரை மேற்கு தொகுதி முதன்மை தொகுதியாக மாறி உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
x
தினத்தந்தி 3 April 2021 5:36 AM GMT (Updated: 4 April 2021 6:19 AM GMT)

அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பெத்தானியாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மதுரை,

மதுரை மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து பூ தூவி வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.  பல இடங்களில் பெண்கள் திரண்டு நின்று எங்கள் ஓட்டு உங்களுக்கே, இரட்டை இலைக்கே என்று உற்சாக ஆரவாரம் எழுப்பி வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பெத்தானியாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது ஜல்லிக்கட்டு காளைகள் மூலம் அமைச்சருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டன. பிரசாரத்தின் போது ஒரு சிறுவன் அமைச்சர் செல்லூர்ராஜூவை வரவேற்றான். உடனே அமைச்சர் அந்த சிறுவனை தோளில் தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். 

பிரசாரத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். நீங்களும் உங்கள் வீட்டு பிள்ளையாக எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். மற்ற தொகுதிகளுக்கு எல்லாம் மதுரை மேற்கு தொகுதி முன்மாதிரியாகவும், முதன்மையாகவும் மாற்றப்பட்டு உள்ளன. நகர்புறமும், கிராமப்புறமும் ஒரு சேர அமைந்துள்ள இந்த தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உங்களது ஆதரவால் நிறைவேற்றப்பட்டுள்ளன. தலைவிரித்தாடிய தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை வசதி, தெரு விளக்கு, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை உள்பட அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மேற்கு தொகுதி மக்களுக்காக எனது பணியும், சேவையும் என்றும் தொடரும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், இலவச வாஷிங் மெஷின் என்பது உள்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன. இந்த அறிப்புகள் அனைத்தும் மதுரை மேற்கு தொகுதியில் முழுமையாக செயல்படுத்தப்படும். ஏற்கனவே கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள மகளிருக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தாலிக்கு தங்கம், கர்ப்பிணி உதவி தொகை போன்றவை முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே தாய்மார்கள் தங்களது முழு ஆதரவினை எனக்கு வழங்கிட வேண்டும் என்று உரிமையோடு கேட்டு கொள்கிறேன். 

மதுரை மேற்கு தொகுதி மட்டுமல்லாது, மதுரை மாநகரம் முழுவதும் எதிர்வரும் 50 ஆண்டு கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,200 கோடியில் செயல்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணி முடிவடைந்து விட்டதால் 24 மணி நேரமும் மதுரை மக்களுக்கு இலவசமாக குடிநீர் கிடைக்கும். இது போல் எண்ணற்ற திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது போல் திட்டங்கள் தொடருவதற்கு பொதுமக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். உங்களது ஆதரவினை முழுமையாக எனக்கு தர வேண்டும். பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Next Story