தர்மபுரி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஆண்கள், பெண்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்


தர்மபுரி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஆண்கள், பெண்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்
x
தினத்தந்தி 7 April 2021 12:49 AM GMT (Updated: 7 April 2021 12:49 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் கொளுத்தும் வெயிலில் நேற்று ஆண்கள், பெண்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் கொளுத்தும் வெயிலில் நேற்று ஆண்கள், பெண்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆர்வத்துடன் வாக்களிப்பு
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பாலக்கோடு, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த 5 தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 76 பேர் போட்டியிடுகிறார்கள்.
100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கும் பகுதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
கிருமி நாசினி
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி தொகுதியில் 385 வாக்குச்சாவடிகளிலும், பென்னாகரம் தொகுதியில் 357 வாக்குச்சாவடிகளிலும், பாலக்கோடு தொகுதியில் 337 வாக்குச்சாவடிகளிலும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 376 வாக்குச்சாவடிகளிலும், அரூர் (தனி) தொகுதியில் 362 வாக்குச்சாவடிகளிலும் என மாவட்டம் முழுவதும் 1,817 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இதன்படி வாக்குச்சாவடி மையங்களில் நுழைந்த அனைத்து வாக்காளர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. உடல் வெப்பநிலை சீராக இருந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கையுறைகள்
அப்போது வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டது. அந்த கையுறையை வலது கையில் அணிந்து கொண்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச் சாவடிகளுக்கு முககவசம் அணியாமல் வந்த வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு முன்பு முக கவசங்கள் வழங்கப்பட்டன. வாக்களித்து விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த வாக்காளர்கள் கையுறைகளை குப்பை தொட்டிகளில் போட்டு சென்றனர். அப்போது மீண்டும் வாக்காளர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு
தர்மபுரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா எர்ரப்பட்டியில் உள்ள உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாரும் இதே வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளும் வாக்களித்தனர். தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் தனது மனைவியுடன் காந்தி நகரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் ஆகியோர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஒருசில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அந்த மையங்களிலும் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு சமரசம் செய்து வைத்து வாக்குப்பதிவு தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்தனர்.

Next Story