பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைப்பு


பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைப்பு
x
தினத்தந்தி 7 April 2021 12:55 PM GMT (Updated: 7 April 2021 12:55 PM GMT)

பழனியில் வாட்டி வதைக்கும் வெயில் எதிரொலியாக பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு, திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை நாட்களிலும் அதிகமாக பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 சமீபத்தில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

இதேபோல் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பலர், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.


கோடைக்காலம் தொடங்கியதையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இதேபோல் பழனி முருகன் கோவிலுக்கும் பக்தர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது. இவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

 பழனி பகுதியில் தற்போது சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 

இதுமட்டுமின்றி கொளுத்தும் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் பாதவிநாயகர் கோவில், வடக்கு கிரிவீதி ஆகிய இடங்களில் தற்காலிக நிழற்குடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பல இடங்களில் கயிற்றால் ஆன தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு, அதில் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகின்றனர். எனினும் வியாபாரிகள் சிலர் பந்தல் அமைத்துள்ள கிரிவீதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது, பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. அதனை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
------

Next Story