சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திர பெட்டியை அதிகாரி திறந்ததால் வாக்குச்சாவடியை பா.ம.க.வினர் முற்றுகை திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு


சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திர பெட்டியை அதிகாரி திறந்ததால் வாக்குச்சாவடியை பா.ம.க.வினர் முற்றுகை திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2021 5:19 PM GMT (Updated: 7 April 2021 5:19 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திர பெட்டியை அதிகாரி திறந்தார். இதனால் பா.ம.க.வினர். வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர், 

முற்றுகை

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. 
வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. 
அதன்பிறகு இரவு 9.45 மணியளவில் வாக்குச்சாவடி அதிகாரி கார்த்திகேயன் பூட்டி சீல் வைக்கப்பட்ட பெட்டியை திறந்து வி.வி.பேட் எந்திரத்தை எடுக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பா.ம.க.வினர் கார்த்திகேயனிடம் முகவர்கள் இல்லாமல் எதற்காக வாக்குப்          பதிவு எந்திரம் வைக்கப்பட்ட பெட்டியை திறந்தீர்கள் என கேட்டு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற போலீசாருக்கும் பா.ம.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குச்சாவடி அதிகாரி கார்த்திகேயன் தான் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பேட்டரியை கழற்றி எடுக்க மறந்து விட்டதாகவும், அதனை எடுக்கவே பெட்டியை திறந்ததாகவும் கூறியதோடு, இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 551 வாக்குகள் பதிவாகி உள்ளன. அதில் ஒரு வாக்கு அதிகம் ஆனாலும் நானே பொறுப்பு என கடிதம் மூலம் உறுதி அளித்தார். இதனை ஏற்ற பா.ம.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story