குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவிலில் திருவிழா


குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவிலில் திருவிழா
x
தினத்தந்தி 7 April 2021 6:31 PM GMT (Updated: 7 April 2021 6:31 PM GMT)

குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதில் இளநீர் கொண்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

குளித்தலை
பேராளகுந்தாளம்மன் கோவில்
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ்நிலையம் பகுதியில் ஊர் காவல் தெய்வமான பேராளகுந்தாளம்மன் கோவில் உள்ளது. குளித்தலையில் உள்ள கோவில்களில் இந்த கோவிலும் முக்கிய கோவிலாகும். எல்லை பிடாரி அம்மன் என்றும் இந்த அம்மன் அழைக்கப்படுவது வழக்கம். 
ஆண்டுதோறும் இக்கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்தாண்டும்  கடந்த மாதம் (மார்ச்) 31-ந்தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. பின்னர் கடந்த 4-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 
அம்மன் வீதி உலா
இதையடுத்து நேற்று முன்தினம் காலை குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட சப்பரத் தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நேற்று அதிகாலை இக்கோவிலை வந்தடைந்தது. 
இதனை தொடர்ந்து நேற்று காலை குளித்தலை நகரப்பகுதியில் (ஓலை) பிடாரி அம்மனின் வீதி உலா நடைபெற்றது. அம்மன் சென்ற வீதிகளில் பொதுமக்கள் இளநீர் கொண்டு பூஜை செய்து வழிபட்டனர். 
கிடா வெட்டு நிகழ்ச்சி
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) குளித்தலை அருகே உள்ள கிராம பகுதிகளான கோட்டமேடு, மைலாடி, குட்டப்பட்டி, அய்யனேரி, தாளியாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அம்மன் கொண்டு செல்லப்பட உள்ளது. 
இதன்பின்னர் மீண்டும் கிராம பகுதியில் இருந்து குளித்தலை நகரப்பகுதிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) இரவு அம்மன் கொண்டு வரப்பட்டு மாவிளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) நகரப்பகுதியில் அம்மன் வீதிஉலா மற்றும் கிடாவெட்டு நிகழ்ச்சியும் நடைபெற்று இரவு அம்மன் குடிபுகுதலுடன் திருவிழா முடிவடைகிறது.

Next Story