மாதிரி ஓட்டுப்பதிவு பெட்டியின் டேக் கீழே கிடந்ததால் பரபரப்பு விராலிமலை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் திறப்பு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாரால் அதிகாரிகள் நடவடிக்கை


மாதிரி ஓட்டுப்பதிவு பெட்டியின் டேக் கீழே கிடந்ததால் பரபரப்பு விராலிமலை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் திறப்பு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாரால் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 April 2021 6:47 PM GMT (Updated: 7 April 2021 6:47 PM GMT)

மாதிரி ஓட்டுப்பதிவு பெட்டியின் ‘டேக்' கீழே கிடந்ததால் விராலிமலை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் ‘சீல்' திறக்கப்பட்டு மீண்டும் பூட்டப்பட்டன. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாரால் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்தனர்.

புதுக்கோட்டை:
வாக்கு எண்ணும் மையம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு நேற்று காலை சீல்' வைக்கப்பட்டன. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி, தேர்தல் பார்வையாளர் ரகு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் இதனை பார்வையிட்டனர். இதில் வேட்பாளர்களின் முகவர்களும் சீல்' வைக்கப்படுவதை பார்வையிட்டனர்.
கலெக்டரிடம் புகார்
 இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் அருகே வாக்குப்பதிவு எந்திரத்திற்கு வைக்கப்பட்ட சீலின் நாடா (டேக்) கீழே கிடந்ததாக கூறி தி.மு.க. வேட்பாளரின் முகவர் செல்லதுரை, கலெக்டரிடமும், தேர்தல் பார்வையாளரிடமும் புகார் தெரிவித்தார். அந்த டேக்கில் வாக்குச்சாவடி அலுவலர், முகவர்களின் கையொப்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விராலிமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன், அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்தி பிரபாகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர். அந்த டேக்', விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மாத்தூர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்குரியது எனவும், அந்த டேக் பாதுகாப்பு அறைக்கு வெளியே எப்படி வந்தது, தேர்தல் நடத்தும் அதிகாரி தண்டாயுதபாணி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
வேறு அதிகாரியை நியமிக்க
வாக்குப்பெட்டியினை மாற்றியிருக்கலாம், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தண்டாயுதபாணியை மாற்ற வேண்டும், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை வேட்பாளர்களின் முகவர்கள் ஆய்வு செய்த பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என கூறி தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் மற்றும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகள் தரப்பில், அந்த டேக்' மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்ட சீட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது இருந்தது எனவும், எப்படி வெளியில் வந்தது என்பது தெரியவில்லை, அது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் அந்த டேக் அதற்குரியது தானா? என்பது சந்தேகம் இருப்பதாக தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையை திறந்து பார்வையிட வேண்டும் என்றனர்.
சீல் வைக்கப்பட்ட அறை திறப்பு
 இதனால் கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் தேர்தல் பார்வையாளர் ரகு ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்தனர். அதன்பின் சீல்' வைக்கப்பட்ட அறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மாதிரி வாக்குப்பதிவுக்கான பெட்டியை பார்வையிட்டனர். அப்போது அதில் சீல்' வைக்கப்பட்ட டேக் இல்லை. அது தான் வெளியே கிடந்தது என்பது உறுதியானது. அதன்பின் வேட்பாளர்களின் முகவர்கள் வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த அறை மீண்டும் பூட்டி சீல்' வைக்கப்பட்டது.
தி.மு.க.வினர் புகார்
வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல்' வைக்கப்பட்ட பின் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலையில் திறக்கப்படுவது தான் வழக்கம். ஆனால் புதுக்கோட்டையில் நேற்று காலையில் வைத்த சீல்' மதியம் திறக்கப்பட்டு மீண்டும் பூட்டப்பட்டது.. ஒரு சிறிய டேக் விவகாரம் நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த டேக் விவகாரம் தொடர்பாக தி.மு.க. தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை கண்காணிக்க முகவர்களை அனுமதிக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் கோரிக்கைவிடுத்துள்ளனர். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story