பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 90 அடியில் இருந்து குறைந்தது


பவானிசாகர் அணையின் நீர்மட்டம்  8 மாதங்களுக்கு பிறகு 90 அடியில் இருந்து குறைந்தது
x
தினத்தந்தி 7 April 2021 9:27 PM GMT (Updated: 7 April 2021 9:27 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 90 அடியில் இருந்து குறைந்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 90 அடியில் இருந்து குறைந்துள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2- வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
90 அடியாக உயர்வு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை காட்டிலும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி காலை 10 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டது. இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காளிங்கராயன் மற்றும் அரக்கன் கோடை, தடப்பள்ளி பாசன பகுதிக்கும், கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டாலும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதானால் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 26 ம் தேதி காலை 6 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 101.97 அடியாக உயர்ந்தது.
நீர் மட்டம் சரிவு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. அதே சமயம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. அணையின் நீர்மட்டம் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு 90 அடியில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. நேற்று மாலை4 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.93 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 332 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
---

Next Story