சேலத்தில் 40 நாட்களில் ரூ.36½ கோடி தங்கம் பறிமுதல்-கலெக்டர் ராமன் தகவல்


சேலத்தில் 40 நாட்களில் ரூ.36½ கோடி தங்கம் பறிமுதல்-கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 7 April 2021 10:20 PM GMT (Updated: 7 April 2021 10:20 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 40 நாட்களில் ரூ.36½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறியுள்ளார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 40 நாட்களில் ரூ.36½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறியுள்ளார்.
வாகன சோதனை
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. 
இவர்கள் தினமும் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 40 நாட்கள் வாகன சோதனை நடந்தது. இந்த சோதனையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், தங்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தங்கம் பறிமுதல்
அதன்படி இதுவரை ரூ.1 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரத்து 800 மதிப்பில் 405 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று ரூ.36 கோடியே 67 லட்சத்து 58 ஆயிரத்து 48 மதிப்பிலான தங்கம் மற்றும் 22 தங்க மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ரூ.39 லட்சத்து 82 ஆயிரத்து 248 மதிப்பில் சேலை, வேட்டிகள், சட்டை துணிகள், டீ சர்ட்டுகள், துண்டுகள், கட்சி கொடிகளும், ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 840 மதிப்பில் மதுபாட்டில்கள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தாமிர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
திரும்ப ஒப்படைப்பு
கடந்த 40 நாட்களில் மொத்தம் ரூ.38 கோடியே 57 லட்சத்து 84 ஆயிரத்து 936 மதிப்பில் பணம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களுக்கு ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் மொத்தம் ரூ.2 கோடியே 7 லட்சத்து 27 ஆயிரத்து 240 மதிப்பிலான பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து 82 புகார்கள் பதிவு செய்யப்பட்டது. அது குறித்து பறக்கும்படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story