ஊட்டியில் 20 அடி பள்ளத்தில் விழுந்த காட்டெருமை கிரேன் மூலம் மீட்பு


ஊட்டியில் 20 அடி பள்ளத்தில் விழுந்த காட்டெருமை கிரேன் மூலம் மீட்பு
x
தினத்தந்தி 8 April 2021 2:24 PM GMT (Updated: 8 April 2021 2:24 PM GMT)

ஊட்டியில் 20 அடி பள்ளத்தில் விழுந்த காட்டெருமை கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

ஊட்டி

ஊட்டியில் 20 அடி பள்ளத்தில் விழுந்த காட்டெருமை கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

தவறி விழுந்த காட்டெருமை

ஊட்டி நகரை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. இங்கு காட்டெருமை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று ஊட்டி ரோகிணி சந்திப்பு பகுதியில் காட்டெருமைகள் கூட்டமாக சென்றது. 

அதில் ஒரு காட்டெருமை குடியிருப்பு அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அந்த குடியிருப்பை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அந்த காட்டெருமை தவறி எதிர்பாராதவிதமாக 20 அடி பள்ளத்தில் விழுந்தது. 

இதனால் கால்களில் அடிபட்டதால் காட்டெருமையால் எழுந்து நடக்க முடியவில்லை. படுத்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிகிச்சை

வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அது பலனளிக்கவில்லை. தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் சரவணன் காட்டெருமையை பார்வையிட்டு சிகிச்சை அளிக்க கால்நடை துறையினருக்கு தெரிவித்தார். 

இதை அடுத்து காட்டெருமை சாப்பிடுவதற்காக கேரட்டுகள், அதன் தழைகள் கொடுத்ததோடு, குடிக்க தண்ணீர் வைத்தனர். இருப்பினும் எழுந்திருக்க முடியாததால், கால்நடை டாக்டர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கிரேன் மூலம் மீட்பு

தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி மீட்கும் பணி நடந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கிரேன் மூலம் காட்டெருமை பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு, வேறு ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது. 

பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர். 

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஊட்டியில் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது இரண்டு வயதான ஆண் காட்டெருமை ஆகும். காட்டெருமையின் பின்புறம் உள்ள இரண்டு கால்களும் செயலிழந்து உள்ளதால், சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து காட்டெருமை கண்காணிக்கப்படும் என்றனர்.

Next Story