மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது அமர்ந்து டிரைவர் தர்ணா


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது அமர்ந்து டிரைவர் தர்ணா
x
தினத்தந்தி 8 April 2021 2:42 PM GMT (Updated: 8 April 2021 2:42 PM GMT)

செம்பட்டி அருகே, புழுக்கள் மிதந்ததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது அமர்ந்து டிரைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டி:

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்காக, அந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் உருண்டோடி விட்டதாக கூறப்படுகிறது. நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த போர்வெல் எந்திர டிரைவர் கர்ணன் (வயது 47) என்பவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறிபார்த்தார்.

 இறந்து கிடந்த காகம்

அப்போது அந்த தொட்டிக்குள் காகம் ஒன்று இறந்து கிடந்தது. மேலும் பாசி படர்ந்து, தொட்டிக்குள் புழுக்கள் மிதந்தன. சுகாதாரமற்ற முறையில் தேக்கி வைக்கப்படுகிற தண்ணீரை குடித்தால், கிராம மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கர்ணன் கருதினார்.

இதுதொடர்பாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது அமர்ந்து திடீரனெ தர்ணாவில் ஈடுபட்டார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், உடனடியாக அதிகாரிகள் அங்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

  பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வசந்தா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ், ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட கர்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர் கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்யப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி டிரைவர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----

Next Story