கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது


கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 April 2021 2:49 PM GMT (Updated: 8 April 2021 2:49 PM GMT)

கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது

கோவை

கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படு கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் ‘மொபைல் தடுப்பூசி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது

மொபைல் தடுப்பூசி திட்டம்

தினமும் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் தினசரி 180 முதல் 220 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி சார்பாக  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா பரிசோதனை இலவசமாக எடுக்கப்படுகிறது. அதே போல் தடுப்பூசியும் போடப்படுகிறது.

45 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வாகனத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டு மாநகராட்சியில் உள்ள தெருக்களுக்கு சென்று அங்கேயே தடுப்பூசி போடப்படும். இந்த மொபைல் தடுப்பூசி திட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

மாநகராட்சி பகுதியில் ஒரு வாரமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. ஒரே வீதியில் 3 பேருக்கு மேல் கொரோனா வந்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். 

தற்போது தெற்கு மண்டலத்தில் 11, வடக்கு மண்டலத்தில் 10, கிழக்கு மண்டலத்தில் 10, மேற்கு மண்டலத்தில் 2, மத்திய மண்டலத்தில் 2 என 35 வார்டுகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

கொரோனா விதிமுறைகளை வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றில் பின்பற்றுவது தொடர்பாக வியாபாரிகளிடம் தகுந்த முறையில் எடுத்துக்கூற வேண்டும். மிரட்டக் கூடாது என மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளோம்.

பள்ளிகள் அரசு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்படும். கபசுர குடிநீர் தேவையான அளவு மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுத்துள்ளோம்.  

கொடிசியாவில் சிகிச்சை மையம்

மாநகராட்சி பகுதிகளில் தினமும் 2500 முதல் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக 31 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இதில் 25- க்கும் மேற்பட்டவை தனியார் பரிசோதனை கூடங்கள் ஆகும். அங்கு போதுமான அளவு ஊழியர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக ஆட்கள் எடுக்கப்படும்.

கொரோனா நோயாளிகளை அழைத்து வருவதற்கு கூடுதலான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படும். காருண்யா, பாரதியார் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என 3 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. தற்போது கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

முதல் கட்டமாக 700 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
இது போல் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா கோவையில் இதுவரை இல்லை. மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகா தார நிலையம் மூலம் இதுவரை 50 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

முன்னதாக, கோவை வடக்கு மண்டலம் வ.உ.சி நகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர், கணபதி முருகன் நகர் பகுதியில் தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story