வேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை


வேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 8 April 2021 3:05 PM GMT (Updated: 8 April 2021 3:05 PM GMT)

3 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கு மதுவிற்பனை ஆனது.

வேலூர்

கடைகள் அடைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக தேர்தல் நடைபெற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அறிவித்தனர். அதன்படி 3 நாட்கள் கடைகள் மூடப்பட்டது. இதைமுன்னிட்டு 3-ந் தேதி மதுவிற்பனை களைகட்டியது. கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்தனர். டாஸ்மாக் கடைகள் அடைப்பால் பலர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். 3-ந்தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.9 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

தேர்தல் முடிந்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு பிடித்த மது மற்றும் பீர் வகைகளை வாங்கி சென்றனர். மதுவிற்பனை அதிகமாக இருந்தது.

ரூ.7¼ கோடிக்கு...

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.4 கோடியே 75 லட்சமும், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகளில் ரூ.2 கோடியே 50 லட்சமும் என மொத்தம் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. 

Next Story