எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரியில் 400 போலீசார் பாதுகாப்பு பணி


எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரியில் 400 போலீசார் பாதுகாப்பு பணி
x
தினத்தந்தி 8 April 2021 4:45 PM GMT (Updated: 8 April 2021 4:45 PM GMT)

வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் 400 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். தீவிர சோதனைக்கு பிறகே கல்லூரிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

திருப்பூர்
வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் 400 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். தீவிர சோதனைக்கு பிறகே கல்லூரிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
180 கண்காணிப்பு கேமராக்கள் வளாகம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பொருத்தப்பட்டுள்ளன. கேமராவில் பதிவாகும் காட்சிகள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி எல்.இ.டி. திரையில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
3 அடுக்கு பாதுகாப்பு
கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வீதம் 3 ஷிப்டுகளாக போலீசார் பணியாற்றி வருகிறார்கள். ஒரு ஷிப்ட்டில் ஒரு துணை கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கட்டிடத்தில் ஒரு தொகுதிக்கு 8 பேர் வீதம் 64 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.
பாதுகாப்பு அறை கட்டிடத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 64 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கல்லூரியின் நுழைவுவாசல், பிரதான கட்டிடம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு கட்டிடம், பி பிளாக், டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிடம், வடக்கு பகுதியில் உள்ள கட்டிடம் ஆகியவற்றில் 5 இன்ஸ்பெக்டர்கள், 11 சப்-இன்ஸ்பெக்டர்கள், 16 ஆயுதப்படை போலீசார், 12 உள்ளூர் போலீசார்  என 44 பேர் பணியாற்றுகிறார்கள். 
இது தவிர கட்டுப்பாட்டு அறையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 6 போலீசார் பணியில் உள்ளனர். வெடிகுண்டு கண்டறியும் பணியில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 6 போலீசாரும் பணியாற்றி வருகிறார்கள்.
413 போலீசார்
3 ஷிப்டுகளையும் சேர்த்து மொத்தம் 3 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 38 சப்-இன்ஸ்பெக்டர்கள், 43 உள்ளூர் போலீசார், 55 ஆயுதப்படையினர், சிறப்பு பட்டாலியனை சேர்ந்த 1 இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 64 போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் 192 என மொத்தம் 413 பேர் ஒருநாளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் கல்லூரியின் நுழைவுவாசலில் முழுமையாக சோதனை செய்யப்பட்டு அதன்பிறகே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட கட்டிடத்தின் அருகே யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் நுழைவுவாசல் வழியாக யார் சென்றாலும் அவர்களின் விவரங்களை பதிவேட்டில் எழுதி அதன்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Next Story