35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி


35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 8 April 2021 5:08 PM GMT (Updated: 8 April 2021 5:08 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
நீட்டிப்பு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் மேலும் பல்வேறு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும், வருகிற 30-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை அரசு நீட்டிப்பு செய்ததைத் தொடர்ந்து. 
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர், நகராட்சி ஆணையாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத் துறையின் சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தடுப்பூசி 
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 59 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 33 மினி கிளினிக்குகள், 8 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 101 இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 35,874 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது பொதுமக்களில் 45 வயதிற்கும் மேற்பட்ட இணை நோய் கொண்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை முழுமையாக கடைபிடிக்காததாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைமுறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலை தற்போது உள்ளது. 
அபராதம்
பொது இடங்களில் பொது மக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் அலட்சியமாக இருந்து வருவது வருத்தமளிக்கிறது. இது நமது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் எச்சில் உமிழ்வோர், முககவசம் அணியாதோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு தனிநபர் அபராதமாக ரூ.200-ம், கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள், திருமண மண்டபங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5000-ம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தற்பொழுது வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.6 லட்சத்து 97 ஆயிரத்து 900 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
110 பேர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 110 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பொதுமக்கள் தங்களது சமூக பொறுப்புகளை உணர்ந்து அரசு மேற்கொள்ளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் மட்டுமே கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், சோப்பு கொண்டு கைகழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
அனுமதி
மேலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடை முறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படவும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள், திரையரங்குகள், உள்ளிட்டவைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். 
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை போன்ற அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறுதெரிவித்தார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பொற்கொடி, இந்திரா, ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன், நகராட்சி ஆணையாளர் ராமர், உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story