வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல்


வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 8 April 2021 5:25 PM GMT (Updated: 8 April 2021 5:25 PM GMT)

போலீசார் இல்லாததால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

வால்பாறை

போலீசார் இல்லாததால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
 
வால்பாறை 

குளு, குளு சூழலையும், அருவிகளையும், பசுமை மாறா காடுகளையும் தனக்குள் வைத்திருக்கும் மலைபிரதேசமான வால்பாறை சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

தற்போது வால்பாறையில் கடும் வெயில் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் இங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

கடும் போக்குவரத்து நெரிசல் 

வால்பாறையில் ஒரே ஒரு மெயின்சாலை உள்ளது. இந்த சாலையில் தபால் நிலையம் முன்பு, பழைய பஸ்நிலையம், காந்திசிலை பஸ்நிலையம், ஸ்டேண்ட்மோர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் போலீசார் நின்று போக்குவரத்தை சரிசெய்வது வழக்கம். 

ஆனால் தற்போது இந்த 4 இடங்களிலும் போலீசார் நிற்பது இல்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதுடன், சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- '

போலீசார் இல்லை 

வால்பாறையில் ஒரே ஒரு மெயின்ரோடுதான் உள்ளது. இந்த சாலையின் தூரமும் மிகக்குறைவு. ஆனால் அங்குதான் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. 

கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை நியமிக்கவில்லை. இதனால் இங்கு சாலை ஓரத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. 

குறிப்பாக சுற்றுலா வரும் பயணிகள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகிறார்கள். இதை வாகன ஓட்டிகள் கூறினால் தகராறுதான் ஏற்பட்டு வருகிறது.

சிக்கிய ஆம்புலன்ஸ் 

தினந்தோறும் இதுபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லக்கூட சிரமமாக இருக்கிறது. இந்த சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. 

அப்போது திடீரென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அந்த ஆம்புலன்ஸ் அதில் சிக்கி தவித்தது. இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்  ½ கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையை கடக்க 20 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிடுகிறது. 

போக்குவரத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் இங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையமும் திறக்கப்பட்டது. 

ஒழுங்குபடுத்த நடவடிக்கை

ஆனால் அது முழு அளவில் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகதான் இருக்கிறது. எனவே இங்கு அடிக்கடி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story