மீனவர்கள் வலையில் சிக்கும் வெள்ளை இறால்


மீனவர்கள் வலையில் சிக்கும் வெள்ளை இறால்
x
தினத்தந்தி 8 April 2021 7:53 PM GMT (Updated: 8 April 2021 7:53 PM GMT)

அதிராம்பட்டினத்தில் மீனவர்கள் வலையில் சிக்கும் வெள்ளை இறால்கள் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகி்றது.

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில்  மீனவர்கள் வலையில் சிக்கும் வெள்ளை இறால்கள் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகி்றது. 
மீனவர்கள் வலையில் வெள்ளை இறால்கள் 
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சில நாட்களாக தென்மேற்கில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீசியதால் விலைபோகாத மத்தி மீன்கள், சிறியவகை மீன்கள் அதிகளவில் கிடைத்தது. இதனால் டீசல் செலவுக்கே வருமானம் இல்லாமல் வீட்டிலேயே ம்ீனவர்கள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 
இதையடுத்து இறால் வரத்தும் குறைவாக காணப்பட்டது. தற்போது காற்று திசைமாறி தெற்கில் இருந்து வடக்கு திசையை நோக்கி அதிகவேகமாக காற்று வீசுவதால் கடலுக்கு அடியில் உள்ள உவர் நீர் தாவர கூட்டங்களுக்கு இடையிலும், பாறைகள் இடுக்கிலும் உள்ள இறால்கள் கடல் அலையின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மேல் நோக்கி வருகின்றன. இதனால் மீனவர்களின் வலையில் அதிக அளவில் வெள்ளை இறால்கள் பிடிபட்டு வருகிறது. 
ரூ.250-க்கு விற்பனை 
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 
தற்போது காற்று வீசுவதால் வெள்ளை இறால்கள் மீனவர்கள் வலையில் அதிக அளவில் பிடிபடுகிறது. ஒரு படகிற்கு பெரியவகை இறால்கள் 7 கிலோ முதல் 12 கிலோ வரை கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.500-க்கு விற்ற இறால்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் கிலோ ரூ.250-க்கு விற்பனையாகிறது. 
அதிராம்பட்டினம் பகுதியில் பிடிபடும் இறால்கள் உள்ளூர் மார்க்கெட்க்கு சில்லரை விற்பனைக்கு வராது. வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கும்  விற்பனை செய்யப்படும். ஆனால் ஏற்றுமதி இல்லாததால் மீனவர்கள் உள்ளூர் மார்க்கெட்டில் ஏலத்தில் விடுகின்றனர். வெள்ளை இறால்கள்  அதிக அளவில் வலையில் பிடிபட்டும் குறைந்த விலைக்கு விற்பனையாவதால்  நஷ்டம் தான் ஏற்படுகிறது. லாபம் ஏதும் இல்லை என்றனர்.

Next Story