பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்- பொதுமக்கள் பீதி


பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்- பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 10 April 2021 11:10 PM GMT (Updated: 10 April 2021 11:10 PM GMT)

பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
பவானிசாகர் வனப்பகுதி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசிக்கின்றன. 
தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு படையெடுக்கின்றன. பவானிசாகர் அணையின் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
அட்டகாசம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் பவானிசாகர் அணை முன்பு உள்ள புங்கார் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. யானைகள் பிளிறிய சத்தம் கேட்டதும் கிராம மக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.
தொடர்ந்து பவானி ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்து விட்டு பின்னர் ஆற்றின் மறுகரையில் ஏறி அண்ணாநகர் வழியாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முட்புதர் காட்டில் முகாமிட்டன. 
கோரிக்கை
அதன்பிறகு நேற்று காலை யானைகள் முட்புதரில் இருந்து வெளியேறி பவானி ஆற்றை கடந்து புங்கார் கிராமம் மற்றும் பொதுப்பணித்துறை பழத் தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
புங்கார் கிராமத்திற்குள் யானைகள் நடமாடுவதை கண்ட கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். தினமும் யானைகள் இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைவதால் வனத்துறையினர் கண்காணித்து விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Next Story