தோகைமலை அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற டெய்லர் கிணற்றில் பிணமாக மீட்பு


தோகைமலை அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற டெய்லர் கிணற்றில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 17 April 2021 6:27 PM GMT (Updated: 17 April 2021 6:27 PM GMT)

தோகைமலை அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற டெய்லர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

தோகைமலை
டெய்லர் 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி தோகைமலை அருகே உள்ள போத்துராவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 32). இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி போதும்பொண்ணு. 
இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்தநிலையில், மகேஸ்வரன் கடந்த 15-ந்தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. 
பிணமாக மீட்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த போதும்பொண்ணு தனது கணவரை உறவினர், நண்பர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை போதுராவுத்தன்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள 100 அடி கிணற்றில் ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் முசிறி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றுக்குள் இறங்கி போலீசாரின் உதவியுடன் அந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது வீட்டில் இருந்து வெளியே சென்ற டெய்லர் மகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பார்த்து போதும்பொண்ணு கதறி அழுதார். 
இதையடுத்து மகேஸ்வரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போதும்பொண்ணு கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story