இளம்பெண்ணுடன் பானிபூரி வியாபாரி தற்கொலை தங்கையை கடத்தியதாக போலீசில் மனைவி புகார் செய்ததால் விபரீதம்


இளம்பெண்ணுடன் பானிபூரி வியாபாரி தற்கொலை தங்கையை கடத்தியதாக போலீசில் மனைவி புகார் செய்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 17 April 2021 10:30 PM GMT (Updated: 17 April 2021 6:33 PM GMT)

தங்கையை கடத்திச்சென்றதாக போலீசில் மனைவி புகார் செய்ததால் பயந்துபோன பானிபூரி வியாபாரி, அவசர அவசரமாக வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்ணுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திரு.வி.க. நகர், 

சென்னை திரு.வி.க.நகர், 4-வது தெருவில் வசித்து வந்தவர் கணேஷ்யூ மான்டல் (வயது 27). மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக அதே பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார்.

கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஜோசென் மற்றும் மகனை மேற்கு வங்காளத்தில் விட்டுவிட்டு கணேஷ்யூ மான்டல் மட்டும் சென்னை வந்து வியாபாரம் செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் கே.சி.கார்டன் 2-வது தெருவில் சரண்ராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டை தன்னிடம் வேலை செய்யும் 17 வயது சிறுவன் தங்குவதற்காக என்று கூறி வாடகைக்கு எடுத்தார். இதற்கு முன்பணமாக ரூ.7 ஆயிரத்தை சரண்ராஜிடம் கொடுத்தார்.

பின்னர் அந்த வீட்டில் மின்விசிறி மாற்றுவதாக கூறி அறைக்குள் சென்ற கணேஷ்யூ நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரிடம் வேலை செய்யும் 17 வயது சிறுவன், ஜன்னல் வழியாக பார்த்தபோது கணேஷ்யூ மான்டல், 18 வயது இளம்பெண் ஒருவருடன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், தூக்கில் தொங்கிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கணேஷ்யூ மான்டலுடன் தற்கொலை செய்த இளம்பெண் அவருடைய மனைவியின் தங்கை என்பது தெரியவந்தது. மனைவியை சொந்த ஊரில் விடச்சென்ற கணேஷ்யூ மான்டலுக்கு அவருடைய மனைவியின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்ற அவர், தனது மனைவியின் தங்கையை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி, தனது தங்கையை கடத்திச்சென்றுவிட்டதாக கணவர் மீது அந்த மாநில போலீசில் புகார் செய்தார். இதனால் பயந்துபோன கணேஷ்யூ மான்டல் நேற்று காலை அந்த வீட்டை அவசர அவசரமாக வாடகைக்கு எடுத்து தனது மனைவியின் தங்கையுடன் தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story