குடவாசல் அருகே 151 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


குடவாசல் அருகே 151 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 19 April 2021 5:55 PM GMT (Updated: 19 April 2021 5:55 PM GMT)

குடவாசல் அருகே 151 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் சீரமைக்கப்படுமா? என்று ெபாதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

குடவாசல், 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ெபரும்பண்ணையூரில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்து உள்ளது. ஆங்கிலேயரால் கடந்த 151 ஆண்டுகளுக்கு முன்பு 1870-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1884-ம் ஆண்டு இந்த தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த ஆலயம் 157 அடி உயரத்தில் 150 அடி நீள, அகலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த ஆலயத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத்தலமாக தமிழக அரசு அறிவித்தது.

வெளிநாடுகளில் இருந்தும்...

நாகை மாவட்டத்தை சேர்ந்த வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, லண்டன் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

இந்த ஆலயத்திற்கு என தனி சிறப்பு வாய்ந்த ஆலயமணி 2. டன் எடை அளவில் உள்ளது. ஆலயத்தில் நடைபெறும் பூஜையின்போது இந்த ஆலய மணி அடிக்கும் ஒலி 6 கிலோ மீட்டர் வரை கேட்கிறது. இந்த மணியும் 170 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாகும்.

பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற இந்த புனித சூசையப்பர் ஆலயம் தற்போது சிதலமடைந்த நிலையில் உள்ளது கண்டு இந்த பகுதி கிறிஸ்தவ மக்களும், பொதுமக்களும் மனவேதனை அடைந்து உள்ளனர்.

எனவே இந்த ஆலயத்தை தமிழக அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த ஆலயத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story