பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 26 April 2021 8:37 PM GMT (Updated: 26 April 2021 8:37 PM GMT)

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர்
 சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக திங்கட்கிழமை தோறும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை என்பதால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். இந்தநிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய தொழிலாளர் கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஒரு மனு கொடுத்தனர். அதில் மலையாளப்பட்டி ஊராட்சி மன்ற தூய்மை பணியாளராக பணிபுரிந்த பெரியசாமி இறந்ததை தொடர்ந்து அவரது மனைவி மல்லிகா மற்றும் 2 மகள்கள் ஈமச்சடங்கு நிதி மற்றும் பணப்பலன்கள் பெறுவதற்கு வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வருவததோடு தரக்குறைவாக பேசிய மலையாளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி மன்ற செயலாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மல்லிகா குடும்பத்தினருக்கு வாரிசு சான்று உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story