கர்நாடகத்திற்கு மேலும் 2 கோடி டோஸ் தடுப்பூசி; கோவிந்த் கார்ஜோள் பேட்டி


துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள்.
x
துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள்.
தினத்தந்தி 30 April 2021 8:03 PM GMT (Updated: 30 April 2021 8:04 PM GMT)

கர்நாடகத்திற்கு மேலும் 2 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

பெங்களூரு: கர்நாடகத்திற்கு மேலும் 2 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

தடுப்பூசியை பெற...

கர்நாடக கொரோனா தடுப்பு செயல்படையின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவரான துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தலைமையில் காணொலி காட்சி மூலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த செயல்படையின் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை (அதாவது இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம். இதற்காக ஏற்கனவே 1 கோடி டோஸ் தடுப்பூசியை பெற பணி ஆணையை வழங்கியுள்ளோம். அத்துடன் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 1 கோடி டோஸ் தடுப்பூசியை கொள்முதல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேவை கட்டணம்

இந்த தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.300 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் 1 கோடி தடுப்பூசிகள் கோவேக்சின் தயாரிக்கும் பாரத் பயோடேக் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆகமொத்தம் 2 கோடி டோஸ் தடுப்பூசியை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம். இது ஒரு டோஸ் ரூ.400 விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு ஒரு டோசுக்கு சேவை கட்டணமாக ரூ.100 மட்டும் விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
இந்த கூட்டத்தில் மந்திரி சி.சி.பட்டீல், தலைமை செயலாளர் ரவிக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story