சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மராட்டியத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை


சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மராட்டியத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 30 April 2021 9:16 PM GMT (Updated: 30 April 2021 9:16 PM GMT)

மராட்டியத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சூரமங்கலம்:
மராட்டியத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தீவிரமாக கண்காணிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்பவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக தினமும் மும்பை லோக்மான்ய திலக்-கோவை சிறப்பு ரெயில் (வண்டி எண் 01013) சென்று வருகிறது. இந்த ரெயிலில் சேலம் வந்து இறங்கும் பயணிகளை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை மூலம் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை
ரெயிலில் வந்தவர்களிடம் செல்போன் எண் மற்றும் முகவரி உள்ளிட்டவைகளை பெற்று கொண்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனைக்கு பின்னர் தான் அவர்களை வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்களிடம் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, கேரளாவில் இருந்து ரெயில்களில் வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களுடைய உடல் வெப்ப நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் யாருக்காவது காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சேலத்தில் இருந்து ரெயில் மூலம் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

Next Story