கடலூாில் மீன் அங்காடிகள், இறைச்சிக்கடைகள் மூடப்பட்டன


கடலூாில் மீன் அங்காடிகள், இறைச்சிக்கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 1 May 2021 4:22 PM GMT (Updated: 1 May 2021 4:22 PM GMT)

ஊரடங்கால் இறைச்சி விற்பனைக்கு 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடலூாில் உள்ள மீன் அங்காடிகள் மற்றும் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் துறைமுக பகுதி வெறிச்சோடியது.

கடலூர் முதுநகர், 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் வாரத்தில் 6 நாட்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அசைவ பிரியர்கள், சனிக்கிழமைகளிலேயே இறைச்சிக் கடைகளுக்கு சென்று முன்கூட்டியே இறைச்சி வாங்க தொடங்கினர். இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மீன் அங்காடிகள் மூடப்பட்டன

இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் நேற்று மூடப்பட்டன. மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகரில் உள்ள மீன் அங்காடிகளும் நேற்று மூடப்பட்டன. 
இதனால் அப்பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மீன் அங்காடிகள் இயங்காது.

வெறிச்சோடிய துறைமுகம்

இதற்கிடையே தற்போது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. சிறிய ரக பைபர் (நாட்டு மர வகைகள்) படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர்.  தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் கடலூர் துறைமுக பகுதி மீனவ கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள், நேற்று ஒரு நாள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என முடிவு செய்தனர்.  அதன்படி நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக கடலூர் துறைமுகம் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால், இன்றும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள் என மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story