கரூர் நகரின் மையப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
கரூர் நகரின் மையப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
இரட்டை வாய்க்கால்
கரூர் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக இரட்டை வாய்க்கால் செல்கிறது. மார்க்கெட் வழியாக செல்லும் இரட்டை வாய்க்காலை சீரமைத்து மேற்புறம் நடந்து செல்லும் வகையில் சில மாதங்கள் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முழுமை அடையாத நிலையில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இந்த மார்க்கெட் இரட்டை வாய்க்கால் அருகில் குடியிருப்புகள், மீன் மார்க்கெட் உள்ளிட்டவைகள் உள்ளன.
பொதுமக்கள் தினமும் அதிகளவில் சென்று வரக்கூடிய இந்த இரட்டை வாய்க்காலில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தேங்கி நிற்கிறது. இந்த இரட்டை வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
நோய்கள் பரவும் அபாயம்
மேலும், இந்த கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரட்டை வாய்க்காலை தூர்வாரி, கழிவுநீர் தேங்கி நிற்காமல் எளிதாக செல்லும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story