2-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: ஈரோட்டில் சாலைகள் வெறிச்சோடின


2-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: ஈரோட்டில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 3 May 2021 12:40 AM GMT (Updated: 3 May 2021 12:40 AM GMT)

2-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி ஈரோட்டில் சாலைகள் வெறிச்சோடின.

ஈரோடு
2-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி ஈரோட்டில் சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஒரு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதுபோல் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் நேற்று அரசு, தனியார் பஸ்கள், வாடகை ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயக்கப்படவில்லை. வாகனங்களின் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வெறிச்சோடின
எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, காளைமாட்டு சிலை பகுதி, பஸ் நிலையம், சூரம்பட்டி நால்ரோடு, மணிக்கூண்டு போன்ற பகுதிகளும், மேட்டூர்ரோடு, சத்திரோடு, நாச்சியப்பாவீதி, ஈ.வி.என்.ரோடு, பெருந்துறைரோடு, நசியனூர்ரோடு, ஆர்.கே.வி.ரோடு ஆகிய முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.
ஈரோட்டில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், பலசரக்கு கடைகள் போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கனி மார்க்கெட், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் போன்றன மூடப்பட்டன. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள்.
நடவடிக்கை
ஊரடங்கை மீறி வெளியே பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சுவஸ்திக் கார்னர், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அத்தியாவசிய காரணமின்றி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். முழு ஊரடங்கு காரணமாக தேர்தல் வெற்றியை கட்சியினர் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story