மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: பண்டர்பூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி


மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: பண்டர்பூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி
x
தினத்தந்தி 3 May 2021 11:06 AM GMT (Updated: 3 May 2021 11:06 AM GMT)

பண்டர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.

மும்பை, 

மராட்டிய சட்டசபைக்கு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூர்- மங்கல்வேதா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பாரத் பால்கே திடீர் மரணம் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிகளவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த மாதம் 17-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் மறைந்த பாரத் பால்கேவின் மகன் பாகிராத் பால்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டார். இவருக்கு கூட்டணி கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ் ஆதரவு அளித்தன.

பா.ஜனதா சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த சமாதன் ஆவ்ததே போட்டியிட்டார். இந்த தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்தநிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஆரம்பம் முதலே 2 பேருக்கும் கடும் போட்டி நிலவியது. 2 பேரும் மாறி, மாறி முன்னிலை வந்தனர்.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா வேட்பாளர் சமாதன் ஆவ்ததே 1 லட்சத்து 9 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஆளும் மகாவிகாஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் பாகிராத் பால்கே 1 லட்சத்து 5 ஆயிரத்து 717 வாக்குகள் பெற்று, 3 ஆயிரத்து 733 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இதன் மூலம் பண்டர்பூர்-மங்கல்வேதா தொகுதியை தேசியவாத காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா பறித்து கொண்டுள்ளது.

மேலும் இந்த இடைத்தேர்தல் ஆளும் கூட்டணி அரசை எடைப்போடும் தேர்தலாக கருதப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்து இருப்பது ஆளும் மகாவிகாஸ் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக திழந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜனதாவுக்கு புதிய உற்சாகத்தை அளித்து உள்ளது.

இதுகுறித்து மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:-

ஆளும் கூட்டணியை சேர்ந்த 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்த்த போதும் நாங்கள் வெற்றி பெற்று உள்ளோம். இது மகா விகாஸ் அகாடி அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து இருப்பதை காட்டுகிறது. உத்தவ் தாக்கரேயால் அரசை நடத்தி செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்ந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story